×

ஒன்றிய அரசு நடத்தும் நீட் தேர்வில் அடுத்தடுத்த முறைகேடுகள் : பீகாரில் 20 மாணவர்களுக்கு முன்கூட்டியே விடையுடன் கூடிய வினாத்தாள் கொடுத்தது அம்பலம்!!

பாட்னா : பீகார் மாநிலத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் ஒரு நூதன மோசடி அரங்கேறி உள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே தேர்வில் முறைகேடு செய்ததாக பீகாரில் 13 பேர், ராஜஸ்தானில் 4 பேர், டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மே 5ம் பீகாரில் நடந்த நீட் தேர்வில் 20 தேர்வர்களுக்கு விடையுடன் கூடிய வினாத்தாள் அளிக்கப்பட்டது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த தகவல் அம்பலமானது. பீகார் மாநிலம் சமஸ்தீபூரைச் சேர்ந்த யாதவேந்து என்பவர் வினாத்தாள் மற்றும் விடையை அளித்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இவர் பீகாரில் பல்வேறு இடங்களில் இருந்து தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த 20 மாணவர்களை இரண்டு கார்களில் அழைத்து வந்து மே 4ம் தேதி பாட்னா புறவழிச்சாலையில் உள்ள ராமகிருஷ்ண நகர் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கவைத்துள்ளார். தேர்வுக்கு முந்தைய நாள் 20 தேர்வர்களுக்கு விடையுடன் கூடிய நீட் வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து 20 தேர்வர்களையும் அழைத்து வர பயன்படுத்தப்பட்ட 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் யாதவேந்து என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர், யாதவேந்துவுக்கு யார் யாருடன் தொடர்பு இருக்கிறது என்பது குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக 4 மாணவர்களும், அவர்களது பெற்றோர்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

The post ஒன்றிய அரசு நடத்தும் நீட் தேர்வில் அடுத்தடுத்த முறைகேடுகள் : பீகாரில் 20 மாணவர்களுக்கு முன்கூட்டியே விடையுடன் கூடிய வினாத்தாள் கொடுத்தது அம்பலம்!! appeared first on Dinakaran.

Tags : Union Government ,Bihar ,Patna ,Rajasthan ,Delhi ,
× RELATED பாட்னாவில் 4 வயது சிறுவனின் சடலம்...